Wednesday 27 February 2013

தலைசாய்த்தேன் தாய்மடியே.. தருகின்றேன் வாழ்த்துப் பல..


கருவில் என்னை உருவாக்கி
உருவமாய் உலகுக்குத் தந்தவள் இன்று
தரணியில் உதித்த நாள்..
தலைசாய்த்தேன் தாய்மடியே..
தருகின்றேன் வாழ்த்துப் பல..
உயிர் கொடுத்து ஊன் கொடுத்து
உலகில் உலவ விட்ட
தாய்மைக்கு என் வணக்கம்...

பெற்றவளே என் தாயே- என்னைப்
பெண்ணாக ஈன்றதனால் தான்
பெருமைமிகு தாய்மை உணர்ந்தேன்..
பிஞ்சு விரல்களைப் பற்றி நீ முத்தமிட்டிருப்பாய்
பால் வழியும் கடைவாயைத் துடைத்து
பதித்திருப்பாய் உன் பாச இதழ்..
பிறிதொருநாளில் இவையெல்லாம்
பழைய நினைவுகளாகிப் போம்...
பசுமையாய் நிற்பதுன் பாச நினைவுகள் மட்டுமே
கற்பனையில் என்னை மேதையாய்
கண்டிருப்பாய்.. நானோ உனக்கு
சான்றோள் எனும் உவகை தந்தேனில்லை- தாயே
நல்லதொரு சேயாய் இல்லையென்றாலும்
நல்லதொரு தாயாய் வாழ முனைகின்றேன்
தாய்மைக்கு என் சேய்களும் தலை வணங்குமாறே...
அதுவரை உன்னை எனக்குள்
அன்புச் சேயாக்கிக் கொண்டேன்...
தொடர்கின்ற வாழ்நாள் முழுதும்- எண்ணத்
தொட்டிலிலே நீயாட வேண்டும்
சோர்ந்து போய்விழும் வேளையிலெல்லாம்
சின்னச் சிரிப்பினால் உயிர்மீள வேண்டும்

-என்
வழி முழுதும் வண்ணமாக உன்
வாடாத பாதமலர்கள் வேண்டும்
என்னோடு கொஞ்சி மகிழும் உன்
இன்மழலை மொழி வேண்டும்...
என்னோடு நீ வேண்டும்..
எனக்குள்ளே நீ வேண்டும்..
என் தேவனிடம் மண்டியிட்டுக் கேட்டேன்
என் தேவதை நீ நீடு வாழ வேண்டும்..

அன்புடன்
உன் மகள் பூங்கோதை
 

Sunday 24 February 2013

நான் தமிழச்சி என்பதால்...



கண்கள் அக்கிரமம் கண்டும்
மூடிக் கொள்கின்றன.......
காட்சிகளைக் கண்களுக்குள் படமாக்கி
கண்ணீரில் கழுவிப் பின் உலர்விக்கின்றன
தவிப்போடு என் நாவு பேச எழுந்து
துடித்துப் பின் துவழ்கிறது..
முறுக்கேறி என் கரங்கள்
முயல்கின்றன ஏதோ ஒன்றை.....
எல்லாமே தோற்றுப் போகின்றன..
நான் தமிழச்சி என்பதால்...
முள்வேலிக்குள் முடங்கிப் போகிறேன்..
பேசினால் ஒருவேளை அது தான்
என் இறுதிப் பேச்சு....- இது
கோழைத்தனம் என்று எனக்குள்
குறுகிப் போகிறேன்....ஆனாலும்
இன்றே நான் அழிந்து விட்டால்..
எனக்குள் சேமித்து வைத்திருக்கும்
நம்மவர் தியாகங்களும்..
நம் இனத்தின் அவலங்களும்
என் சந்ததிக்கு யார் பகிர்வார்...
ஆனாலும்
குமுறி எழுகின்ற யாவையும்
கொட்ட முடியா வேதனை...
பிரசவிக்க முடியாக் கருபோல்
பேரவலமாய் உள்ளிருந்து எழும்
மரண வலியோடு நான்......

அன்பான ஆர்வலரே.. உங்கள் தமிழ்மண வாக்குப் பதிவுகளுக்காக இங்கே கிளிக்குங்க..






Thursday 21 February 2013

பரமசிவன் கழுத்தில் இருந்து.......

வணக்கம் நண்பர்களே!
இது ஒரு வித்தியாசமான பதிவு...
பதிவுக்கு போறதுக்கு முன்னாடை ஒரு கதை சொல்றன் கேளுங்க...

சிவனின் கழுத்தில் ரொம்பநாளாகவே இருக்கும் பாம்புக்கு ஒரு கவலை... தன் இனத்துப் பாம்புகள் எல்லாம் ஊர்ந்து தரையில் திரிகின்றனவே.. எவ்வளவு கஸ்ரப்பட்டு இரை தேடுகிறார்களே என்று வேதனைப் பட்டுச்சாம்.. தனக்கு கிடைத்த நல்ல வாழ்க்கையைப் பற்றி சந்தோசமும் பெருமையும் இருந்தாலும் தன் இனத்து பாம்புகளைப் பற்றி மிகவும் கவலை அதை வாட்டிக்கிட்டே இருந்துச்சாம்.. அது கூட சிவனின் கழுத்துக்கு வருவதற்கு முன் இதை எல்லாம் அனுபவித்தது தானே...

அப்படியான வேதனை மிகுந்த உணர்வுகளோடு காத்திருந்த பாம்பு.. ஒருமுறை வேலியில் ஊர்ந்து கொண்டிருந்த பாம்பிடம் கேட்டதாம்... நண்பா எப்படியிருக்கிறாய்??? உங்களை நினைத்து நான் வேதனைப்படுகிறேன்... என்று ஆரம்பித்து தன் வேதனை உணர்வுகளைக் கொட்டிச்சாம்...
உடனே அந்த வேலிப் பாம்பு சீறிச்சாம் பாருங்க.....
ஆமா.... பரமசிவன் கழுத்துல இருக்குற உனக்கு எங்களுடைய கஸ்டம் புரியுமா???? நீலிக் கண்ணீர் வடிக்கிறாயா??? உனக்கான லாபம் தேடுகிறாயா??? எத்தனை கழுகுகளுக்கு நாங்கள் இரையாகியிருப்போம்... எத்தனை இழப்பை சந்தித்தோம் நாங்கள்... சிவனின் கழுத்தில் இருக்கும் தைரியம்.... உன்னைப் பேசவைக்கிறது.. எங்களுக்காக கவலைப்படக்கூட உனக்கு உரிமை இல்லை...”..   இப்படி வார்த்தைகளைக் கொட்டோ கொட்டென்று கொட்டிச்சாம்....
இதுல என்னங்க நியாயம்???


ஏன் இவங்க எல்லாம் இப்படி இருக்குறாங்க...
சில நாட்களாக மனதுக்குள் கொதித்துக் கொண்டிருந்த விடயம்.. இன்று தம்பி ராஜ் (Kss.Rajh) இன் முகநூல் கருத்து என் உள்ளே குமுறிக் கொண்டிருந்ததை வெடித்து வெளிக் கொணர வைத்தது.

அதாவது ராஜ்ன் கருத்துக்கும் இதற்கும் தொடர்பு இல்லை நண்பர்களே.. தப்பா புரிஞ்சுக்காதீங்க... அவருடைய கருத்துக்கு அதிலயே பின்னூட்டம் போட்டிருந்த இன்னொரு நண்பரின் பரமசிவன் கழுத்துப் பாம்பு என்றா சொல் எனக்கு இதை ஞாபகமூட்டிச்சுன்னு சொல்ல வந்தேன்...


எப்படியோ.. சொல்லாமல் போக இருந்த கருத்தை சொல்வதற்கு.. தான் அறியாமலே தூண்டுதலா இருந்த தம்பி ராஜ்க்கு என் நன்றிகள்..

எமது முகநூல் பக்கம் காண்பிப்பது தற்போது நாம் வாழும் இடத்தையும் எமது நிழற் படங்களையும் மட்டும் தான். எங்கள் உள்ளங்களின் படங்களையோ அல்லது எங்கள் கடந்தகால அனுபவங்களின் படங்களையோ அல்ல...
முகநூலில் வாழிடம் புலம்பெயர் தேசம் என்று இருந்துவிட்டால், அவர்களுக்கு எம் தேசம் பற்றிய உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமை தாயக வாழ் மக்களில் சில புரிந்துணர்வற்றவர்களால் தாக்கப்படுகிறது.
கீழ்வரும் பதிவை இரண்டு நாட்களுக்கு முன்னரே தயாரித்து விட்டேன். இப்பொழுது போடனும் என்ற தூண்டுதல்... போட்டுவிட்டேன்....
*********
செம கடுப்பிலே தான் இந்தப் பதிவை எழுத ஆரம்பிக்குறன்...

என்னங்க இது அநியாயம்... ஒரு விசயத்தை பேசுறதுக்கு சிங்கள அரசாங்கத்தின்ர ஆட்சிக்கு கீழ தான் கருத்து சுதந்திரம் இல்லையென்றால் இந்தப் பதிவுலகத்தில அழுகிறதுக்கு கூடவா சுதந்திரம் இல்ல...

இதுக்குன்னே சுத்திக் கிட்டிருக்காங்க சில பேர். இவங்களுக்கு ஒரு வித நோயாம்... (யாரப்பா அது.. அந்த நோய்க்கு ஒரு பேரு வையுங்கப்பா...)

ஒரு பக்கம் ஈழமக்களைப் பகடைக்காய்களாக வைத்து கீழ்த்தர அரசியல் செய்பவர்கள் இருக்கிறார்கள் தான்.. இன்னும் சில புல்லுருவிகள் விடுதலைப் போருக்கு எதிரான கருத்துக்களை சொல்லிக் கொண்டு திரியுதுகள்... சிலர்.. ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்ற கட்சி... இப்படி பல விதமானவர்கள் இருக்கவே இருக்கிறார்கள் அதில் மறுப்பேதும் இல்லை.

ஆனால் இந்தப் புது வித நோய் பிடிச்சு அலையுற ஆட்கள் ஒரு வித்தியாசம்... என்னெண்டால்.. மேல சொல்லியிருக்கிற அத்தனை விதமானவர்களையும் கண்ணுக்குள்ளயே வைச்சுக்கிட்டு... அப்படியே காமாலைக் கண் மாதிரி... எல்லாரையுமே அதே பார்வையில பார்க்கிறது தான் இவங்களோட நோயின்ர அறிகுறி... எல்லாரும் ஒரே மாதிரியாவே தெரியுதாம்...

ஈழம் தொடர்பான எந்தச் சொல்லை யார் பேசினாலும் அது சுயலாபமா தான் இவங்கட கண்ணுக்கு தெரியுதாம்... மற்றவங்க என்ன சொல்லியிருக்கிறாங்க எண்டதை பொறுமையா கருத்து விளங்கி வாசிக்க பொறுமையும் கிடையாது, அறிவும் கிடையாது.. சரி.. அந்தப் பதிவை போட்டவங்க யார்.. அல்லது பதிவாளாரின் ஏனைய பதிவுகள் மூலம் அந்தப் பதிவர் எப்படிப்பட்ட கருத்து கொண்டவர் என்றெல்லாம் ஆராயவும் இவங்களுக்கு முடியுறேல்ல.. அல்லது விருப்பமில்ல...

ஈழதேசத்து செய்திகளைப் பார்த்து என் உணர்வுக் கொந்தழிப்பால் எழுந்த ஓர் கவிதைக்கு அடையாளத்தோடும், அடையாளம் இன்றியும் சில பேர் வந்து என்னைக் கடுப்பேத்திட்டாங்க.

எங்கள் குருதியில் நீங்கள் வெளிநாட்டிலிருந்து குளிர் காயாதீர்கள் என்று சண்டை போடுகிறார்... இவர்கள் எல்லாம் என்ன நினைத்துக் கொண்டு பேசுகிறார்கள் என்று புரியவில்லை.

நாங்கள் புலம்பெயர்ந்து விட்டோம் என்பதற்காக என் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் அழக்கூடாது என்று சட்டம் இயற்ற முனைகிறார்களா??? உங்களால் தன்னும் தாயகத்தின் பாதுகாப்பற்ற சூழலில் இருந்துகொண்டு உரக்கப் பேசமுடிகிறதா??? உங்களால் முடியவில்லை என்றால் அடுத்தவர்களை எதற்குத்  தடுக்கிறீர்கள்... இதை வயிற்றெரிச்சல் என்று எடுத்துக் கொள்ளலாமா??

தாயகத்தில் இருக்கும் உறவுகள் இழப்புகளைச் சந்தித்து உடைந்து போய் இருப்பவர்கள். அவர்கள் பல்வேறு மன அழுத்தங்களில் இருக்கிறார்கள் என்பதும் உண்மைன் தான்.. ஆனால் அதே இழப்புகளைச் சந்தித்தவர்கள் புலம்பெயர்நாடுகளிலும் இருக்கிறார்கள் என்பதை இவர்கள் நினைவிற்கொள்ள வேண்டும்... ஒருவன் புலம்பெயர் நாட்டில் இருந்து எழுதுகிறான் என்றால் அவன் அந்த நாட்டில் பிறந்து வளர்ந்தவன் என்றோ, அல்லது ஈழத்தை அறியாதவன் என்றோ இவர்கள் நினைத்தால் இவர்களின் அறியாமையை என்னவென்று சொல்வது...

எல்லா இடத்திலும் நல்லவர்களும் இருக்கிறார்கள்... கெட்டவர்களும் இருக்கிறார்கள். ஈழத்தில் மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்கள் வேதனையைக் கண்ணால் கண்டு கொண்டே துரோகச்செயல்கள் செய்கிறவர்கள் இருக்கும் போது, புலம்பெயர் நாடுகளில் இல்லாமற் போகமாட்டார்கள்.. எனவே அதை விவாதிக்கவோ நியாயப்படுத்தவோ நான் முயலவில்லை. ஆனால் படைப்புகளை விமர்சிக்க முதல் பகுத்துணரப் பழகுங்கள்...  யாரால் யாருக்கு எழுதப்படுகிறது என்பதை கொஞ்சம் ஆராயுங்கள்.. படைப்பின் நோக்கத்தை உங்கள் பார்வையின்படி  பொதுமைப்படுத்த முனையாதீர்கள்...

என் நண்பர் ஒருவர் சொன்ன கருத்தையும் சொல்றன்... “பத்திரிகைகள் சுயலாபம் என்று கருதி செய்தி வெளியிடாவிட்டால் செய்தி எப்படி மக்களுக்குப் போகும்???” அட.. சரி தானேய்யா.. அப்படி என்றால், இந்த நோய் பிடிச்சவங்களை எல்லாம் இனி பத்திரிகை அலுவலகங்களுக்கு எல்லாம் போய்உங்க லாபத்துக்காக எங்க பிரச்சனையைப் பற்றி பேசாதீங்க..` என்று சண்டை போடச் சொல்லணும்... இவங்களோட இந்த மாலைக் கண்ணுக்கு சனல் 4 கூட எப்படித் தெரியுமோ தெரியலயே....

ஆனால் இந்த நோய்க்கு ஒரே மருந்து, பகுத்தாய்தலென்ற பவர்ஃபுல் கண்ணாடி போடுறது தான்... ஆனால் நீங்க போட்டாலும் போடலன்னாலும்... நாங்க பதிவு போட்டுட்டு தாங்க இருப்போம்...

# ஸ்ஸ்ஸப்பா... இவிய்ய்ங்ககூட கத்துறதுக்கே நம்ம தொண்டைத்தண்ணி வத்திடுதே... இனிமேல் இவங்களுக்கெல்லாம் நான் பதில் சொல்லப் போறதில்லைங்க...

அடுத்த தடவை ஒரு நல்ல பதிவோட வர முயற்சிக்கிறேன்...
நன்றி...